ரூ 35,000 கடனுக்காக மகளை விற்ற தந்தை!

  சண்டிகர், ஜூன் 15: ரூ.35,000 கடன் தொகையை திருப்பித் தர முடியாததால் தனது மகளை விற்று கடனை அடைந்துள்ளார் ஒரு தந்தை. 13 வயது சிறுமியை விலை கொடுத்து வாங்கிய 32 வயதான அந்த நபர் அவளை திருமணம் செய்து கொண்டார்.

சண்டிகர் அருகே உள்ள யமுனா நகரில் இந்த கொடிய சம்பவம் நடந்துள்ளது.

ஒம் பிரகாஷ் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த மோகன்லால் (வயது 54) என்பவருக்கு இரண்டு மகள்கள். இளைய மகளுக்கு 13 வயது. ஓம் பிரகாஷிடம் மோகன்லால் ரூ.35,000 கடன் வாங்கி இருந்தார்.

கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டார். கொடுத்த கடனை கேட்டு ஓம் பிரகாஷ் நெருக்குதல் கொடுக்கவே, தான் வாங்கிய ரூ.35,000 கடனுக்கு தனது இளைய மகளை சிறுமி என்றுகூட பார்க்காமல் மோகன்லால் விற்றுவிட்டார்.

சிறுமியை விலை கொடுத்து வாங்கிய ஓம் பிகாஷ் (32 வயது) அந்த சிறுமியை திருமணம் செய்து கொண்டார். தனது தங்கைக்கு நேர்ந்த இந்த அவலத்தை அறிந்ததும் மோகன்லாலின் மூத்த மகள், தனது உறவினர்களுடன் ஓடி வந்து தட்டிக் கேட்டு போலீசில் புகார் செய்தார்.

சிறுமியை திருமணம் செய்ததற்காக குழந்தைகள் திருமண தடை சட்டத்தின்கீழ் ஒம் பிரகாசை போலீசார் கைது செய்தனர். இந்த சிறுமிக்காக அவளது தந்தைக்கு நாங்கள் நிறைய பணம் கொடுத்திருக்கிறோம் என்று ஒம் பிரகாசின் பெற்றோர் கூறினர்.

இது குறித்து உள்ளூர் போலீஸ் அதிகாரி நிர்மல்சிங் கூறுகையில், ÔÔசிறுமி விற்கப்பட்டாளா? என்பது பற்றி இப்போது எதுவும் சொல்வதற்கு இயலாது. விசாரணை நடத்திக் கொண்டு இருக்கிறோம். குழந்தை திருமண தடை சட்டத்தின்கீழ் முதல் நடவடிக்கை எடுத்திருக்கிறோம்ÕÕ என்றார்.

அகில இந்திய பெண்கள் ஜனநாயக சங்கத்தின் மாநில செயலாளர் சகுந்தலா கூறுகையில், ÔÔ அரியானா மாநிலத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மணமகள் கிடைக்காதவர்கள் பண பலத்தை பயன்படுத்தி சிறுமிகளை விலை கொடுத்து வாங்க தொடங்கி இருக்கிறார்கள்ÕÕ என்றார்.

 

Leave a comment