ஆப்கானிஸ்தானில் பலியான இங்கிலாந்து ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது

lankasri.comஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகளை முற்றிலும் ஒடுக்குவதற்காக அந்த நாட்டில் அமெரிக்க, இங்கிலாந்து உள்பட நேட்டோ நாடுகளின் ராணுவம் அங்கு நிறுத்தப்பட்டு உள்ளது. 2001-ம் ஆண்டு முதல் அமெரிக்க, இங்கிலாந்து ராணுவ வீரர்கள் அந்த நாட்டில் தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

தலீபான் தீவிரவாதிகளும் தற்கொலை தாக்குதல் மற்றும் கண்ணி வெடி தாக்குதல் ஆகியவை மூலம் ராணுவ வீரர்களை பழிவாங்கி வருகிறார்கள்

இந்த தாக்குதல் மூலம் ஏற்கனவே இங்கிலாந்து ராணுவ வீரர்கள் 97 பேர் பலியாகி உள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை ஹெல்மண்ட் மாநிலத்தில் சாங்கின் பள்ளத்தாக்கு என்ற இடத்தில் 4 ராணுவ வீரர்கள் முகாமுக்கு திரும்பிகொண்டு இருந்தபோது, ஒரு தீவிரவாதி தன் உடலில் கட்டி இருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தான். இதில் 4 ராணுவ வீரர்களும் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்த ராணுவ வீரர்கள் உடனடியாக முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு போய்ச்சேர்ந்ததுமே, ஒரு வீரர் இறந்து போனதாக அறிவிக்கப்பட்டது. மற்ற 2 பேரும் சிகிச்சை பலனின்றி இறந்துபோனார்கள். ஒருவர் மட்டும் பிழைத்துவிடுவார் என்று டாக்டர்கள் தெரிவித்தனர். பலியான 3 பேரையும் சேர்த்தால் இதுவரை மொத்தம் பலியான இங்கிலாந்து ராணுவ வீரர்களின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்தது.

அவர்கள் மரணம் அவர்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. ராணுவ மந்திரி டெஸ் பிரவுனி பலியான 3 வீரர்களின் குடும்பத்துக்கு தன் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்து கொண்டார்.

இன்னொரு நாட்டுக்காக தங்கள் நாட்டினர் 100 பேரை இழந்ததை இங்கிலாந்து நாட்டு மக்கள் விரும்பவில்லை. ஹெர்ட்ஸ் மாநிலத்தை சேர்ந்த ஆண்டனி பிலிப்சன் கூறுகையில், ஆட்சியாளர்கள் வியட்னாமில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. கொரில்லா தீவிரவாதிகள் ராணுவ சீருடை அணிவது கிடையாது. அவர்கள் மரங்களின் பின்னால் ஒளிந்து கொண்டிருப்பார்கள். விரும்பியபோது வெளியே வந்து சண்டை போடுவார்கள். அவர்களுடன் சண்டை போடுவது நேரத்தையும், உயிரையும் வீணடிப்பது ஆகும் என்று குறிப்பிட்டார்.

Leave a Reply